சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு
அரியலூர், டிச. 29: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் அருள்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று, 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியது:
மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அதற்காக நிதியை ஒதுக்கியுள்ளது.
கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார் அமரமூர்த்தி.
விழாவில் குருவாடி ஊராட்சித் தலைவர் வீர. ரவி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் பொதுச் செயலர் தேவர், கோபி உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.